Friday, April 10, 2009

நான் வீடு மாற்றிய கதை

நான் இங்கு வந்து 28 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இப்போதுதான் வந்ததுபோல் நான் இங்கு வந்தது நன்கு நினைவு உள்ளது. நான் இதுவரை அனேகமாக புதிதாக கட்டிய வீட்டில் தங்கியுள்ளேன்.இப்போது கடந்த எட்டு வருடமாக பழைய வீட்டில் உள்ளேன். இது எனது ஆறாவது வீடு. இனி வீடு மாறவேண்டியிருக்காது. 

நான் 27 ஆம் வட்டம் டில்லி ரோட்டில் உள்ள டைப் - 1 வீட்டுக்கு முதலில் வந்தேன். எனது காலேஜ் நண்பர்களே என்னுடன் தங்கினர்.ஒரு வீட்டை மெஸ் ஏற்பாடு செய்து அங்கு சாப்பிட்டு வந்தோம். 

திருமணத்திற்கு பின்னர் 5 ஆம் வட்டம் டைப் - 1 வீட்டுக்கு வந்தேன். அதன் பின்னர் 3 வருடம் கழித்து டைப் - 2 வீடு 6 ஆம் வட்டம் கிடைத்து வந்தோம். அங்கு 5 வருடங்கள் வசித்துவிட்டு 21 ஆம் வட்டத்தில் டைப் - 3 வீடு கிடைத்து வந்தோம் .

அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. அந்த இடம் கடைதெரு, பஸ் ஸ்டாண்ட்,பள்ளிக்கூடம் ஆகியவற்றிற்கு ரொம்ப தள்ளி இருக்கும் இடமாக இருந்ததால் மிகவும் சிரமபடோம். அப்போது அங்கு இருந்த எனது நண்பர்கள் என்னை வரலாம் என்று சொல்லியதால் அங்கு சென்றோம். ஆனால் அங்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. திடீரென்று பார்த்தால் ஒரு நாள் எனது நண்பர்கள் வீடு மாற்றிக்கொண்டு சென்று விட்டார்களா. 

நானும் உடனே வேறு வீடு வசதியான இடமாக பார்த்து மாற்றி வட்டம் 6 இல் டைப் -3 வீட்டுக்கு வந்தேன். மிகவும் வசதியுடன் மாடியில் சைடு பால்கனி உள்ள வீடு. கடைதெரு, பஸ் ஸ்டாண்ட்,பள்ளிக்கூடம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தது.
திடீரென்று பார்த்தால் ஒரு நாள் எனது பக்கத்துக்கு வீட்டுக்காரர் வீடு மாற்றிக்கொண்டு சென்று விட்டார்.

அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. புதிதாக வந்தவர் அட்டகாசம் தங்க முடியவில்லை. இசைக்குழு, சாலையோர பரோட்டா கடை நடத்திவந்தவர் அவர்.ஏற்கெனவே இருந்த வீட்டில் லொள்ளு தங்க முடியாமல் துரத்திவிடப்பட்டு இங்கு வந்தவர். இங்கும் வந்து அதை தொடந்தார்.

எங்களுக்கு அவர் வந்த உடனே தொல்லை ஆரம்பமாகி விட்டது. ஒரு வாரமாக தினசரி பேப்பர் ஹிந்து வரவில்லை.ஒரு வாரம் கழித்து பேப்பர் பையன் ஒருவழியாக பக்கத்துக்கு வீட்டுக்காரர் இரண்டு ஹிந்து பேப்பரையும் எடுத்து வைத்திருந்தது தெரிந்தது. அதே போல் பால் பாக்கெட்டுகளையும் , தபால்களையும் எடுத்து வைத்திருந்தார்கள். அடிக்கடி அதே போல் செய்வார்கள்.ஒரே பேஜார்தான். 

தபால் காரரும் பேப்பர் பையனும் இந்த வீடு உங்களுக்கு சரிப்பட்டு வராது வேறு வீடு பாருங்கள் என்று சொல்லி விட்டார்களா. 

தினம் காலையில் பேப்பர் காரரையும் பால்காரரையும் தபால்காரரையும் வரும் வரை ஜன்னல் வழியாக பார்ப்பதே எனது வேலையாகி விட்டது. அத்தோடு முடிந்ததா என்று பார்த்தல் பிரச்சனை வேறு வடிவத்திலும் வந்தது. அவர்கள் வீடு எப்போதும் பூட்டியிருக்கும். யாரேனும் பூட்டை கவனிக்காமல் காலிங் பெல்லை அழுத்திவிட்டால் போதும் பெல் சப்தம் நாலு வீட்டுக்கு கேட்பதுபோல் அடிக்கும். அதை நிறுத்த முடியாது. வீட்டை திறந்து அதற்கான சுவிட்சை நிறுத்தவேண்டும். எனவே அந்த பெல் எப்போதும் அடித்துகொண்டே இருக்கும்.

அதே போல் துணி அயர்ன் பண்ணுபவன், வேலைக்காரி தொல்லையும் தாங்க முடியாது. வேலைக்காரி போன் செய்து வர லேட்டாகும் அல்லது வரவில்லை என்று அவர்களிடம் சொல்ல சொல்வாள். நீயே போனில் சொல்ல வேண்டியதுதானே என்றபோது அவள் சொல்லிய பதில் அப்படியே எங்களை தூக்கிவாரி போட்டது .அவளுடைய எஜமான் தூங்கி கொண்டிருப்பார்களாம்.எனவே அவர்களை தொந்தரவு செய்யாமல் எங்களிடம் சொல்லி அவர்கள் விழிக்கும் பொது சொல்லவேண்டுமாம். 

உடனே வேறு வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இந்தமுறை வீடு உள்ள இடமும் நல்ல இருக்கணும் பக்கத்துக்கு வீட்டுக்காரரும் தொந்தரவு தராதவராக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.

அப்போது கடைதெரு அருகில் உள்ள டைப் - 3 காலியாவது தெரிந்து வந்து பார்த்தோம். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் முன்பே தெரிந்தவர்கள் தான். எனவே உடனே அந்தவீட்டுக்கு குடி வந்தோம். 

No comments: